திருப்பூர், ஆகஸ்ட் 06 –
மாவட்டத்தில் இது வரை 10,73,048 நபர்கள் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே நிறைந்து மனம் நிகழ்ச்சியின் மூலம் தகவல். திருப்பூர் மாவட்டத்தில் இது வரை 10,73,048 நபர்கள் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளார்கள்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், வட்டம் சாரா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், காசநோய் மருத்துவமனை, சானடோரியம், தொழுநோய் மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு மனநலம் காப்பகம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் ஆகியவைகள் மூலம் பொது மக்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும், மகப்பேறு மற்றும் குழந்தை நல்வாழ்வினை மேம்படுத்துவதை முக்கியத்துவமாக கொண்டு அரசு மருத்துவமனைகளில் (மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் உட்பட) ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயுற்ற பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் நலம், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை, பால்வினை நோயியல், எலும்பு முறிவு, மயக்கவியல், குழந்தை நலம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், அவசரகால ஊர்தி சேவை, ஆய்வுக்கூட சேவை, தொழு நோய், காசநோய், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் தொற்றா நோய் போன்ற சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் உயர்தொழில் நுட்ப கருவிகள் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டங்களான கலைஞர் வருமுன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற திட்டங்கள் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் உயர் இரத்த அழுத்த நோய், இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு பரிசோதனை, ஆதரவு சிகிச்சை, இயன்முறை மருத்துவம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அவிநாசி வட்டாரத்தில் 05.08.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கடந்த 05.08.2021 முதல் இதுவரை உயர் இரத்த அழுத்தம் 5,45,325 நபர்களும், நீரிழவு நோய் 2,02,304 நபர்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழவு நோய் 2,22,482 நபர்களும், நோய் தடுப்பு சிகிச்சை 49,553 நபர்களும், இயன்முறை மருத்துவம் 53,384 நபர்களும் என மொத்தம் 10,73,048 நபர்கள் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவர தெரிவித்தார்கள்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், பொங்குபாளையம் பகுதியை சேர்ந்த திருமதி மாரத்தாள் அவர்கள் தெரிவிக்கையில்: என் பெயர் மாரத்தாள். எனக்கு 75 வயதாகிறது. கடந்த 15 ஆண்டுகளாக எனக்கு சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோய் உள்ளது. இதற்காக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வரிசையில் காத்திருந்து, சிகிச்சைக்கான மாத மாத்திரைகள் வாங்கி வந்தேன். இதனால் எனக்கு வயதான நிலையில் மிகவும் சிரமமாக உள்ளது.
தற்போது எனக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீடு தேடி எனது நோய்க்கான பரிசோதனையும் செய்து இரண்டு மாதத்திற்கான மாத்திரைகளும் வழங்குகின்றனர். இதனால் நான் தற்போது அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் எனது வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த சிறப்பான திட்டத்தை அறிவித்து செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.



