நாகர்கோவில், பிப். 9 –
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கான தேர்வு நேற்று முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் முற்பகலில் 181 தேர்வர்களும் (ஒ எம் ஆர் முறையில்), பிற்பகலில் 185 தேர்வர்களும் (விரிவான முறையிலும்) எழுத உள்ளதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தேர்வுக்கான வினாத்தாளர்கள் கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தேர்வு கூடத்திற்கு தேர்வு தேர்வர்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல்துறை மூலம் போதிய பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் தேர்வு நுழைவு சீட்டுடன் காலை 9 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னையில் சில மையங்களில் தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறி முதலில் சென்னையில் மட்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக டிஎன்பிசிஎஸ்சி அறிவித்தது. பின்னர் தமிழ்நாடு முழுவதும் 38 மையங்களில் நேற்று நடைபெற இந்த குரூப் 2, 2 ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிப்பு வெளியானது.
நாகர்கோவில் எஸ்எல்பி பள்ளி மையத்தில் தேர்வர்களுக்கு வினாத்தாளர்கள் வழங்கப்பட்டு தேர்வு நடந்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தேர்வு நடந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் அந்த தகவல் உடனே தேர்வர்களுக்கு வழங்கப்படவில்லை. தேர்வுகள் தொடர்ந்து நடந்தது. அதன் பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.அதனால் தேர்வகள் ஏமாற்றம் அடைந்தனர்.


