திருப்பத்தூர், செப். 8 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவ சகாயம் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றதற்கு பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர் பொதுமக்கள் பலரும் இணைந்து மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மற்றும் பொற்கிழி வழங்கி சிறப்பித்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் திருக்கரங்களால் கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் தேவசகாயம் நல்லாசிரியர் விருதினை பெற்றார். விருதினைப் பெற்று பள்ளிக்கு வருகை தந்த தலைமையாசிரியருக்கு பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மேள தாளம் வாத்தியங்களுடன் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பிரேமா சுகுமார், கல்விக்குழு சுகுமார், துணை தலைவர் அசோகன், உறுப்பினர் நந்தனார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன், பொருளாளர் சுரேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் பொருளாளர் மூர்த்தி, தொரனம்பதி சங்கர், தீபா, இருபால் ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து கைத்தட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.



