நாகர்கோவில், ஜூன் 30 –
குமரியில் பல இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள ஒரு வீட்டில் பத்தாயிரம் ரூபாய் திருடிய வழக்கிலும் வடசேரி புது குடியிருப்பு பகுதியில் 74 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடிய சம்பவத்திலும் திருட்டில் ஈடுபட்ட முட்டம் பகுதியைச் சார்ந்த நிக்சன் 28 என்பவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து எஸ்பி ஸ்டாலின் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் மேற்பார்வையில் எஸ்ஐ அஜய் ராஜா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர் கிருஷ்ண பிரசாத், முதல்நிலை காவலர் அமுதன் ஆகியோர் சேர்ந்த தனிப்படை அமைக்கப்பட்டு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நிக்சனை தேடி வந்தனர்.
தொடர்ந்து திருட்டு நடந்த இடங்களோடு தொடர்புடைய பல பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. பல இடங்களில் விசாரணை செய்ததில் நேற்று வடசேரியிலிருந்து வெள்ளமடம் நோக்கி நிக்சன் சென்றதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் எஸ்ஐ அஜய்ராஜா தலைமையிலான போலீசார் நிக்சனை மடக்கிப்பிடித்தனர்.
மேலும் அவரிடம் விசாரித்த போது அவர் வெள்ளமடத்திலும் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. திருட்டு வழக்கில் இருந்து தப்பி செல்வதற்காக நேற்று வெளிநாடு செல்லவும் நிக்சன் திட்டமிட்டு இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் நிக்சனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.