நாகர்கோவில், ஏப். 9 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுபாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடகச் சான்றளிப்பு கண்காணிப்பு மையம் உள்ளிட்ட மையங்கள் நாஞ்சில் கூட்டரங்கில் செயல்பட்டு வருகிறது.
இக்கட்டுப்பாட்டு அறை 24×7 அடிப்படையில் செயல்பட்டு, தேர்தல் நடத்தை விதிமீறல்கள், சி விஜில் செயலி புகார்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டது. மேலும் ஊடகக் கண்காணிப்பு பிரிவில் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகள், கட்டணச் செய்திகள் மற்றும் அனுமதியற்ற விளம்பரங்கள் கண்காணிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளபட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் தேர்தல் விதிமீறல்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து 1800-599-8010 மற்றும் தேர்தல் உதவி எண் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.



