தென்காசி, ஜூன் 19 –
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் தெரிவித்ததாவது: பொதுமக்களின் நலன்கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எல்லாப் பாதைகளும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யும் வகையில் பொருளாதார மற்றும் சீரான ஒருங்கிணைந்த சாலைப்போக்குவரத்து சேவையை வழங்குவதற்காகப் புதிய விரிவான மினிபஸ் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் 54 வழித்தடங்களுக்கு புதியமினி பேருந்து சேவை வழங்க செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டு நேற்றைய தினம் முதற்கட்டமாக 06 புதிய வழித்தடங்களுக்கும் 23 இடம் பெயர்வு அடிப்படையிலான மினிபஸ்சேவை தொடங்கப்பட்டது. இதில் தென்காசி வட்டாரப்போக்குவரத்து அலுலகத்திற்குட்பட்ட பகுதியில் 6 புதிய வழித்தடங்களுக்கும், 4 இடம்பெயர்வு அடிப்படையிலான வழித்தடங்களுக்கும் சங்கரன்கோவில் வட்டாரப்போக்குவரத்து அலுலகத்திற்குட்பட்ட பகுதியில் 19 இடம்பெயர்வு அடிப்படையிலான வழித்தடங்களுக்கும் புதிய மினிபஸ் சேவை வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (சங்கரன்கோவில்/தென்காசி) செல்வி, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சேக் அப்துல்லா, தென்காசி நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி நகர காங்கிரஸ் துணைத் தலைவர் சித்திக், மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-I ராஜன் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சங்கரன்கோவில்), மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-I கனகவள்ளி, (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஆலங்குளம்), மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II மணிபாரதி (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தென்காசி) மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.