உசிலம்பட்டி, ஜூலை 02 –
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே பழையூரில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பழையூர் கருப்பசாமி கோவிலில் பங்கேற்று சிறப்பு பூஜை வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
அதன் பின்னர் திருப்புவனத்தில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற அஜித்குமார் என்பவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி வேண்டி காவல் நிலையமா? கொலை நிலையமா? என்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்: முதல்வர் விளக்கம் அளித்த போது விசாரணையின் போது மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சொல்கிறார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் ஒன்றை பதிவு செய்துள்ளனர். அதில் கொடுமை என்னவென்றால் முதல்வர் சொல்வதற்கும், முதல் தகவல் அறிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது. 18 இடங்களில் காயம் இருப்பதாக நீதியரசர் சொல்லுகிறார். முதல் தகவல் அறிக்கையில் தப்பி ஓட முயன்ற போது வலிப்பு வந்து கீழே விழுந்து இறந்து விட்டார் என சொல்கிறார்கள்.
அஜித்குமார் என்ற இளைஞரை அடித்து துன்புறுத்தும் போது அவர் எழுப்பிய அபாய குரலை அங்கு இருக்கும் பொதுமக்களே சொல்கிறார்கள். இன்று ஒரு சார்பு ஆய்வாளர் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்
பட்டுள்ளது. வேலியே பயிரை மேய்ந்தது போல அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.
இது போன்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தி நான்கு பக்கத்தில் இருந்தும் வருகிறது. முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறாரே தவிர எதும் செய்யவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக தான் ஜூலை 7-ம் தேதி முதல் எழுச்சி பயணம் மேற்கோள்ள உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
சட்டமன்றத்தில் நாட்டின் துயரங்களை எடுத்து சொன்னால் நேரலையை துண்டிக்கிறார்கள். மக்கள் மத்தியில் எடுத்து சொன்னால் பேரலையாக வரவேற்பதை முதல்வரால் தடுத்து நிறுத்த முடியாது. நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், கண் துடைப்பாகி விட கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம் என்று பேட்டியளித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக -வினர் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.