நாகர்கோவில், ஜூன் 25 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் காவல்துறையுடன் இணைந்து ஊர்க்காவல் படையினரும் இணைந்து செயல்படுகின்றனர்.
இந்த நிலையில் செட்டிகுளம் சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஐலின் பிரபா என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனவிளை பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய இடலாக்குடி குளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜகுமரன் (26) என்பது தெரிய வந்தது.
மேலும் இவர் மீது பல்வேறு காவல் நிலைய வழக்குகள் நிலுவையில் உள்ளதும், போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பதும் தெரியவந்தது. குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய முக்கிய பங்காற்றிய ஊர்க்காவல் படையை சேர்ந்த ஐலின் பிரபாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி கௌரவித்தார்.



