தஞ்சாவூர், ஏப்ரல் 23 –
வாக்காளர்களை கவரும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மாதிரி வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள் தேர்தல் பணியில் இருப்பார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்ட சபை தொகுதிகள் உள்ளன தொகுதி வாரியாக தலா ஒரு மாதிரி மற்றும் முழுமையான பெண்கள் அலுவலர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி (பிங்க் பூத்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களை கவரும் வகையில் தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டு, சந்தனம், குங்குமம் போன்ற மங்களப்பொருட்கள் வைத்து வரவேற்பு அளித்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அதன்படி தஞ்சாவூர் தொகுதியில் கரந்தை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஒரத்தநாடு தொகுதியில் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை தொகுதியில் பட்டுக்கோட்டை ஜெயலாயம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, பேராவூரணி தொகுதியில் சாணக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருவையாறு தொகுதியில் திருவையாறு ஜோசப் மேல்நிலைப்பள்ளி, பாபநாசம் தொகுதியில் சக்கரப்பள்ளி அங்கன்வாடி கட்டிடம், கும்பகோணம் தொகுதியில் கீழகொண்டையூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருவிடைமருதூர் தொகுதியில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலபான தேசிகர் நடுநிலைப் பள்ளி மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் முன்பு துணிகளால் பந்தல் அமைக்கப்பட்டு தரை விரிப்புகளும் விரிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள், போலீஸ் துறை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் என அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். இவை பிங்க் பூத் என அழைக்கப்படுகிறது. பெண் வாக்காளர்கள் குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க இது உதவுகிறது.
பிங்க் பூத்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, குடிநீர் மற்றும் நிழற்கூடங்கள், போன்றவை உள்ளன. பெண் வாக்காளர்கள் பொது வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம். இது பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்படுகிறது.



