தஞ்சாவூர், ஜூலை 17 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து தரமானதாக முடிக்க வேண்டும் என்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்பு குழு தலைவர் முரசொலி எம்பி தலைமை தாங்கினார். இணை தலைவர் சுதா எம்பி, கல்யாண சுந்தரம் எம் பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ரேவதி, எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், கோவி. செழியன், அண்ணாதுரை,
அசோக்குமார், துரை சந்திரசேகரன் விஜய் சரவணன், மேயர்கள் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, பயிற்சி கலெக்டர் சுபாஷ் கார்த்திக், துணை மேயர் தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முரசொலி எம்பி பேசுகையில்: வேளாண்மை, தோட்டக்கலை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மின் வாரியம், ஊரக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், சுகாதாரத்துறை, மாவட்ட தொழில் மையம், உணவு பொருள் வழங்கல், சமூக பாதுகாப்பு திட்டம், சத்துணவு திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மேலாண்மை துறையின் தேசிய மேலாண்மை வளர்ச்சி திட்டங்கள், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், மண்வள அட்டை, பயிர்க் காப்பீடு திட்டம், தோட்டக் கலை துறையின் பிரதமர் நுண்ணீர் பாசன திட்டம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பள்ளி செல்லாத குழந்தைகள் நிலவரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து துறைகளும் மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் களப் பணிகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கும்பகோணம் கோட்டாட்சியர், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முரசொலி எம்பி பேசுகையில்: இந்த கூட்டம் நடத்துவது குறித்து 15 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும் பலர் வரவில்லை. வராத உயர் அதிகாரிகளுக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அடுத்த முறை உயர் அதிகாரிகள் வராவிட்டால் கூட்டத்தை நடத்த மாட்டோம் என்றார்.



