கோவை, ஆகஸ்ட் 03 –
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் காரமடை நண்பர்கள் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயத்தை மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் மற்றும் காரமடை நகராட்சித் தலைவர் உஷா வெங்கடேஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். காரமடை சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் 5 கிலோமீட்டர் தொலைவும், ஏழு முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவும் பங்கேற்று ஓடினர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரளான மக்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தானில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு வயது அடிப்படையில் பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. காரமடை வார்டு கவுன்சிலர் சஞ்சீவ் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சி.என். ரூபா, நிர்வாக மேலாளர் திரு. மனோகரன் அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
முனைவர் தேவப்ரியா,முன்னாள் நிர்வாக மேலாளர் திரு. சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர் திரு.அன்பரசன்,பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி கல்வி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், இது நமக்கான ஓட்டம், நம் தேசத்திற்கான ஓட்டம் என்ற தேசப்பற்றை அனைவருக்கும் ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது.