குளச்சல், ஆக. 25 –
குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் அனிஷ் (36). தொழிலாளியான இவர் சம்பவ தினம் சேனம் விளையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது அதே மண்டபத்திற்கு ஆட்டோ டிரைவரான மிக்கேல் ராஜ் மற்றும் ஜெபா என்கிற ஜான் ஆகியோர் வந்தனர். திருமண மண்டபத்தில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர்.
இதையடுத்து மறுநாள் அனீஸ் பைக்கில் திக்கணக்கோட்டில் இருந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ஆட்டோவில் வந்த மிக்கேல் ராஜ் ஆட்டோவை பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் பைக்கிலிருந்து கீழே விழுந்த அனீஸ் படுகாயம் அடைந்தார். பைக் மற்றும் அவருடைய செல்போன் சேதமடைந்தது. அனிஷ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் மிக்கேல் ராஜ், ஜெபா என்கிற ஜான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


