நாகர்கோவில், ஜூன் 9 –
குமாரபுரத்தில் புதிதாக கட்டப்பட்டக் காவல் சோதனைச் சாவடியைத் திறந்து வைத்த எஸ்.பி. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் பகுதியில் காவல்துறை சார்பில் தற்காலிக சோதனைச் சாவடி நிறுவப்பட்டிருந்தது. அச்சோதனைச் சாவடியைத் தரம் உயர்த்தித் தர மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையினை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட எஸ்.பி உடனடியாக சோதனைச் சாவடியைத் தரம் உயர்த்த உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் தரம் உயர்த்தப்பட்டக் காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. அதில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதனை உள்ளிருந்து கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நேற்று எஸ்.பி.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர். லலித்குமார், ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் பச்சமால் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.