நாகர்கோவில், ஜூன் 6 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான தொழில் ரப்பர் விவசாயம் ஆகும். மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் ரப்பல் பரவலாக உள்ளது. ரப்பர் விவசாயத்திற்கு ஏற்ற காலநிலை இங்கு உள்ளதால் ஏராளமானவர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய எஸ்டேட், தோட்டங்கள் என சுமார் 75 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் விவசாயம் குமரியில் செய்யப்பட்டு வருகிறது. ரப்பர் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பு பெறுகின்றனர்.
இந்த ஆண்டு ரப்பர் பால் வெட்டும் பணி தொடங்கிய சில நாட்களிலேயே வெப்ப சலனம் காரணமாக குமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், மலையோர பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கி அடை மழையாக பெய்து வருகிறது. இதனால் கடந்த மூன்று வாரங்களாக பால் வெட்டும் பணிகள் முடங்கியுள்ளது.
குறிப்பாக வளைகுடா நாடுகளின் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோலிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் இயற்கை ரப்பர் பயன்பாடு அதிகரித்துள்ளது. ரப்பர் விலை சர்வதேச மார்க்கெட்டில் ரூ. 300 ஐ நெருங்கி வருகிறது.
ரப்பர் விலையேற்றம் உள்ளூர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மழை காரணமாக பணிகள் முடங்கி உற்பத்தி பாதித்திருப்பது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை பாதிப்படைய செய்துள்ளது.



