நாகர்கோவில், ஜூலை 4 –
கிள்ளியூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சாந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க ஐஆர் இஎல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசின் இயற்கை வளங்கள் துறை அரசாணை பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கிள்ளியூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம், ஏழுதேசம், கொல்லங்கோடு வில்லேஜ் பகுதியில் உள்ள பல கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அமைவதாக இருந்த இத்திட்டம் அமையப்பெற்றால், சுற்றுசூழல் பாதிப்படைந்து அதனால் கொடிய நோய்கள் ஏற்படுவதோடு, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். மேற்படி பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், ஐஆர் இஎல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசம் முடிவடையும் நாளில் மக்களின் எதிர்ப்பிற்கு செவிசாய்க்காமல், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணை கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் இதே அறிவிப்பு வந்தபோது அனைத்து பகுதி மக்களும் இத்திட்டத்தைச் பலமாக எதிர்த்தனர். நச்சுத் திட்டங்களை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய தவெக, தற்போது ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் அத்திட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கன்னியாகுமரி மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.
எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் நிலம் ஒதுக்கிய ஆணையை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.


