நாகர்கோவில், செப்டம்பர் 20 –
குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் 56 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் விஜய் வசந்த் எம்பி அதனை ஆய்வு செய்தார். குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் காரோடு வரையிலான நான்கு வழி சாலை பணிகள் ரூ.1041 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 56 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணியானது 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விஜய் வசந்த் எம்பி குமரி மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளை ஆய்வு செய்து பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஆன்ஸ்ட்ராஜ், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த சாலை கூடிய விரைவில் அர்ப்பணிக்க ஆவண செய்ய அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். நீர் பாசன கால்வாய்கள் உள்ள பகுதிகளில் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை, தண்ணீர் வரும் பகுதிகள் அடைக்கப்படுவதாக மனுக்கள் வந்துள்ளன. விவசாயத்திற்கு எந்தவித இடர்பாடுகள் வராமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தினார். நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.


