கிருஷ்ணகிரி, செப். 13 –
கிருஷ்ணகிரிக்கு நாளை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி நல உதவிகளை வழங்குகிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தால் (Thal) விமான ஓடுதளத்தை வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலமாக கிருஷ்ணகிரிக்கு வருகிறார். அங்கு சுங்கச்சாவடி அருகில் தி.மு.க.வினர் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணா சிலை, பெங்களூரு சாலை, 5 ரோடு, சென்னை பை-பாஸ் சாலை வரையில் முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள அரசு விழாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிறார். அங்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கிறார். அதைத் தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிடுகிறார்.
தொடர்ந்து விழா மேடைக்கு வந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசுகிறார். தொடர்ந்து அமைச்சர்கள், கலெக்டர் நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து நல உதவிகளை வழங்குகிறார். விழாவில் மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் நன்றி கூறுகிறார்.
விழாவை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தே. மதியழகன் இல்லத்திற்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் ஓசூர் சென்று விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி முதல் கிருஷ்ணகிரி நகர் முழுவதும் பல இடங்களில் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் முதலமைச்சர் ரோடுஷோ செல்லும் பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒளிரும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. முதல்வரின் வருகையால் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கழகத்தினர் கொடி மற்றும் பேனர்கள் வைத்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.



