ஈரோடு, ஜூன் 18 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பழைய பாசனப் பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு அணையில் உள்ள நீர் இருப்பு, பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பாசனத்திற்காக 120 நாட்களுக்கு 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் காளிங்கராயன் அணைகட்டிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டனர். இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 2025-2026 ஆம் ஆண்டு முதல்போக பாசனத்திற்கு ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்காலிலுள்ள 15,743 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 16.06.2025 முதல் 13.10.2025 வரை 120 நாட்களுக்கு 5184.00 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும். பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 18.24 டி.எம்.சி-ம், நீர் வரத்து 5962 கன அடி/வினாடியும், அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலின் வெளியேற்றப்படும் நீரின் அளவு 750 கன அடி/வினாடியும், காலிங்கராயன் கால்வாயில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 கன அடி/வினாடியும் உள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தலைமைப் பொறியாளர் (கோவை மண்டலம்) முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் (எல்.பி.பி வடிநிலவட்டம்) கோபி, செயற்பொறியாளர் (கீழ்பவானி வடிநிலக்கோட்டம்) திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவிப் பொறியாளர் சபரிநாதன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.