கன்னியாகுமரி, மே 15 –
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகப் பெருந்திருவிழா 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 20ம் தேதி மாலையில் கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப் பட்டம் மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக நடக்கும் கொடி மரக்கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவர்களால் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. 21ம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த திருவிழா 30ம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
9ம் திருவிழாவான 29ம் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. 10ம் திருவிழாவான 30ம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது. தெப்பத்திருவிழா நிறைவடைந்த பின்னர் நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த விழாவுக்கான கால் நாட்டு நிகழ்ச்சி இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்திலும் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



