கன்னியாகுமரி, ஜன. 19 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசையையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். தை அமாவாசையையொட்டி இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. வீதி உலாவின்போது அம்மன் கன்னியம்பலம் மண்டபம் வழியாக சென்றுவிட்டு மீண்டும் அதே வழியாக கோவிலுக்கு திரும்பி சென்ற நிகழ்ச்சியும் நடந்தது. அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் போது பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.
அம்மன் வீதி உலாவுக்கு பின்னர் நள்ளிரவு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும். கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்தனர்.பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.



