தருமபுரி, மே 15 –
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மணியம்பாடியில் ரூ.5 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு ரயில் வடிவில் இருப்பதை பார்வையிட்டார்.
கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் உள்பட கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார். இவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து குடிநீர் விநியோகம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் செயல்பாடுகளை குறித்து அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன் கல்பனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



