சென்னை, அக். 09 –
தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் மாநில மையம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் தா. ஸ்டாலின் ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் வ. காமராஜ், ஜெ. ரவிச்சந்திரன், மாநில இணைச்செயலாளர்கள் ஆ. முத்துராஜா, டி. ரவிச்சந்திரன், தலைமை நிலை செயலாளர் ஜெபராஜ் ஷோபனகுமார், மாநில அமைப்பு செயலாளர் பி. தங்கவேல், மாநில தணிக்கையாளர் வெ. ரவிச்சந்திரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநில தலைவர் மற்றும் தலைமை நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
நாங்கள் உணவு கலப்பட தடைச் சட்டம் 1954 -இன் படி உணவு ஆய்வாளர் பயிற்சி முடித்து உணவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறோம். உணவு பாதுகாப்பாளர் பணிக்கான உணவு மாதிரி எடுத்தல், தடை செய்யப்பட்ட உணவு விற்பனைகளை கண்காணித்தல், நடவடிக்கை எடுத்தல், கைப்பற்றிய பொருட்களை அழித்தல், சட்டப்பூர்வ அதிகாரத்தை பரிந்துரைத்தல், நீதிமன்றம் மற்றும் தீர்ப்பு படி வழக்குப்பதிவு செய்தல், குற்றங்கள் தனது தன்மைக்கு ஏற்ப சிறை தண்டனை மற்றும் அபராதம் பெறுதல் பல்வேறு பணிகளை ஒரு துறையின் கீழ் செய்து வருகிறோம்.
இந்நிலையில் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் தம்முடைய பணிக்காலத்தில் குறைந்தபட்சம் மூன்று கட்ட பதவி உயர்வு பெறுவது அவருடைய பணித்தன்மையில் மாற்றம் உருவாக்கி அவர்களுக்குள் மனச்சோறு நீக்குவதாக இருக்கும். இது குறித்து கடந்த 5.4.2022 எமது சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று எங்களது கோரிக்கைகள் நியாயமானது என்றும் சட்டத்திற்கு உட்பட்டது என்றும் அது குறித்து அரசு விரைவில் தக்க நடவடிக்கை எடுத்து உதவி பதவி உயர்வு வழங்கும் என்றும் என அதே தேதியில் அறிவித்தார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அனைவருக்கும் ஒரே பதவியில் இருந்து வருகிறோம். எனவே எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இன்றளவும் இருப்பதால் வேறு வழியின்றி 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி உண்ணாவிரத கூட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.



