நாகர்கோவில், மே 22 –
கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு பெருமளவு கனிமவள கடத்தல் நடந்து வந்தது. கனிமவள கடத்தல் வாகனங்கள் மோதி பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் கனிமவள வாகனங்கள் குமரி மாவட்ட மக்களுக்கு எமனாகவே மாறி வந்தது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் குறுக்கு வழியில் கனிமவள கடத்தல் தொடர்ந்து வந்தது.
இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடத்தல் லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதன் மூலம் குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் இல்லா குமரி மாவட்டமாக மாறி, உயிரிழப்புகளும் குறைந்தது.
இந்நிலையில் கனிம வள கடத்தல் கும்பல்கள் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை முற்றுகையிட்டு கனிம வளம் கடத்த அனுமதி கேட்டு, அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்து உள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசுதல் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் 7 ஆண்டுகள் வரை தண்டனை பெறும் கொலை மிரட்டல் உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கல்குவாரிகளில் உரிய காலத்தில் ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுவதால் கனிமவள கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.


