ஈரோடு, ஜூன் 7 –
அந்தியூர் எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் அம்மாசை
(வயது 35). இவர் மீது தமிழ்நாடு வனச் சட்டம் மற்றும் வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும் மற்றும் இவர் மீது பிற வனச்சரகங்களில் வன உயிரினக்குற்றம், சந்தன மரக்குற்றம் மற்றும் கள்ள நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றம் என தொடர் குற்றவாளியாக ஈடுபட்டு வந்ததாலும், இதுபோன்ற குந்தகமான நடவடிக்கைகளில் இனி வருங்காலங்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நாட்டு வெடிகுண்டு, கண்ணிவலை, பொறிகள், சட்டத்திற்குப் புறம்பாக மின்வேலியில் மின்சாரத்தினை செலுத்தி வன உயிரினங்களைக் கொல்லுதல் மற்றும் நாட்டுத்துப்பாக்கிகள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி வேட்டையாடும் வனக்குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் மற்றும் வன உயிரின (பாதுகாப்பு) சட்டத்தில் நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினி வெளி சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் குடிசைப் பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் மீது அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளிவராத அளவிற்கு குண்டர் சட்டத்தில் கைது சிறையிலடைக்கப்படுவர். மேலும், வன உயிரினங்களை வேட்டையாடுவதற்காக சட்ட விரோதமாக வைத்திருக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை சம்பந்தப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட வனச்சரகத்தில் ஒப்படைத்திடுமாறும் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு கேட்டு கொண்டுள்ளார்.