ராமநாதபுரம், ஜூன் 7 –
அதிமுக, பாஜக கூட்டணி அமைந்த நாளில் இருந்து
திமுக தோல்வி பயத்தில் உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.ராமேஸ்வரத்தில் நேற்றிரவு நடைபெற்ற ராணி அஹில்யா பாய் ஹோல் கேரின் 300 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய இணை பொதுச்செயலர் சிவ பிரகாஷ் ஆகியோர் நேற்று ராமநாதபுரம் வந்தனர். அச்சுந்தன் வயலில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ஜூன் 22ல் மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஒலி பெருக்கி வைக்கக்கூடாது உள்பட பல்வேறு இடையூறுகளை சேகர் பாபு கொடுத்து வருகிறார். முருக பக்தர்கள் எழுச்சியால் அச்சமடைந்துள்ளார். அதிமுக, பாஜக., கூட்டணி அமைந்த நாளில் இருந்து திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்நேரமும் அதிமுக, பாஜக கூட்டணியை திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக மக்கள் செல்வாக்கு இழந்துள்ளது. மதுரையில் இன்று நடைபெறவுள்ள பாஜக நிகழ்வுகளில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.அமைச்சர் மனோ தங்கராஜின் பேச்சு, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு விலை சொல்வது போல் அவரது பதில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மத்திய கயிறு வாரிய முன்னாள் தலைவர் குப்புராமு, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சண்முகநாதன், குமார், முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.