நாகர்கோவில் நவ -7
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “குமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட சரல்பகுதியைச் சேர்ந்தவர் ரெத்னசாமி. இவரது மனைவி அன்னசெல்வம். இந்தத் தம்பதியினர் தங்களது இளைய மகள் அஜிதா என்பவரை, சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை என்பவரது மகன் சக்திவேலுக்கு(33) இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 25 ஆம் தேதி திருமணம் செய்து கொடுத்தனர்.
ஏழ்மை நிலையில் இருந்தாலும், ரெத்தினசாமி தன் மகளது திருமணத்திற்கு 18 பவுன் தங்க நகையும், 2 லட்சம் ரொக்கப் பணமும் வரதட்சணையாகக் கொடுத்துள்ளார். புகுந்த வீட்டில் தன் மகள் சந்தோஷமாக இருப்பார் என நம்பிய நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு, அஜிதாவுக்கு சக்திவேல் தினமும் தொல்லைகொடுக்க ஆரம்பித்தார். சக்திவேலுக்கு அறிவுரை சொல்லித் திருத்த வேண்டிய அவரது உறவினர்கள் மணிகண்டன், கண்ணன், கிருஷ்ணன் உள்ளிட்டோரும் அவர் செய்வதுதான் சரி என்பது போல் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சக்திவேல் தினமும் வரதட்சணை கேட்டு அவரது மனைவி அஜிதாவை கொடுமைப்படுத்துவது குறித்து அஜிதாவின் பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்போது போலீஸார் தம்பதிகள் அஜிதா, சக்திவேல் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து சமரசம் செய்தும் அனுப்பி வைத்தனர். கூடவே தன் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை டைரியில் எழுதிவைக்கும் பழக்கம் அஜிதாவுக்கு உண்டு. அந்த விசாரணையின் போதே, அஜிதாவின் கஷ்டங்களை எழுதிய டைரியையும் போலீஸார் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி, இரவு கணவர் வீட்டில் இருந்து அழுதபடியே தன் பெற்றோருக்கு போன் செய்த அஜிதா தினம், தினம் தனக்கு நடக்கும் வரதட்சணை கொடுமைகள் அளவுகடந்து செல்வதாக அழுதுள்ளார். இரவாகிவிட்டதால் காலையில் வந்து பார்க்கிறோம்..எல்லாம் சரியாகிவிடும் என அஜிதாவின் பெற்றோர் அவரிடம் ஆறுதல் தெரிவித்துள்ளார்கள்.
பெற்றோரின் சமாதானத்தை ஏற்று போனை துண்டித்துவிட்டு சமாதானமாகத் தான் போய் இருக்கிறார் அஜிதா. ஆனால் மறுநாள் காலை 6 மணிக்கு அஜிதாவின் கணவர் சக்திவேல், அஜிதாவின் பெற்றோருக்கு போன் செய்து அவர் இறந்துவிட்டதாகச் சொல்லியுள்ளார். அலறி அடித்து அவர்கள் சென்றபோது மின்விசிறியில் தூக்கு மாட்டியதாக சக்திவேல், அஜிதாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இரவில் சமசரம் ஆகி, படுக்கைக்கு சென்றவர் காலையில் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பே இல்லை. இன்னொன்று, அவர் மரணத்திலும் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. தூக்குப் போட்ட நிலையில் இருக்கும் அஜிதாவின் புகைப்படங்களே அந்த சாவில் இருக்கும் மர்மத்தை வெளிக்காட்டுகிறது.
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த சக்திவேல், தன் மனைவி அஜிதாவை கொலை செய்திருக்காலாமோ என்னும் சந்தேகம் அவரது டைரிக் குறிப்புகள், ஏற்கனவே வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் அழைத்து விசாரிக்கப்பட்ட நிகழ்வுகள் ஆகியவற்றை முன்வைத்து எழுகிறது. இவ்விவகாரத்தை கோட்டாட்சியர் விசாரித்து வரும் நிலையில், போலீஸார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி அதிகபட்ச தண்டை கிடைக்கவும், பெண்களின் பாதுகாப்பைக் காக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.