தென்தாமரைகுளம்., நவ. 15.
அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சரவணந்தேரியை சேர்ந்தவர் ஜெனோ, வயது 38 இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு காற்றாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி மீரா வயது 35 இவர் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜெனோ வயிற்று வலியால் அவதியடைந்து வந்ததாகவும் அதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெனோ வயிற்று வலியால் அவதியுற்ற அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு அவரது மனைவி மீரா மருந்து கொடுத்து விட்டு அன்று மாலை சுமார் 5 மணி அளவில் குழந்தையை கூட்டிக்கொண்டு அருகில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு சுமார் 9 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு திறந்திருந்த நிலையில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார் ஜெனோ. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மீரா அருகில் உள்ளவர்கள் துணையோடு அவரை கீழே இறக்கிப் பார்த்தபோது வயிறு உப்பிய நிலையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது மனைவி மீரா கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.