கன்னியாகுமரி,நவ.26-
பிரபாகரன் பிறந்தநாள் குறித்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்;
தன் வீடு, தன் குடும்பம், தன் பதவி, தன் சொத்து என்ற சுயநல தலைவர்களை தமிழினம் பார்த்திருக்கிறது.
ஆனால் இவை அனைத்தையும் துறந்து , இனம் காக்கவும் மீட்கவும் போர்க்களம் புகுந்த மன்னவர்களை நாம் நம் வரலாற்றிலும் இலக்கியங்களில் தான் பார்த்திருந்தோம்.
அதை சமகாலத்தில் நம் கண்முன் காட்டியவர் நம் தலைவர் பிரபாகரன்
இங்கு ஆள்பவர்களால் வெறும் வாய்ப்பேச்சு அரசியலாக இருக்கும்
சாதி ஒழிப்பு , சமத்துவம் , பெண் உரிமை , சுயமரியாதையை இவை அனைத்தையும் நாடு கட்டி செயல்முறைக்கு கொண்டுவந்தவர் தலைவர்
மேடைக்கு ஒரு கொள்கை தேர்தல் கூட்டணிக்கு ஒரு கொள்கை என கட்சிகளும் கட்சித் தலைவர்களும் இருக்கும் இந்த காலத்தில்.
கொள்கை சமரசம் எள்ளளவும் இல்லாமல் நான் தடம் மாறினால் நீங்களே என்னை கொன்றுவிடலாம்
என்று சொன்ன தலைவனை வேறெங்காவது பார்க்க முடியுமா?
ஒற்றை சீட்டுக்கும் அற்ப பதவிக்கும் தன்னை நம்பியிருக்கும் சமூகம் தொண்டர்கள் என அத்தனையும் அடகு வைப்பவர்கள் இருக்கும் இந்த காலத்தில்
தமிழீழ அதிபர் ஆக்குகிறேன் திரிகோண மலையை மட்டும் தந்துவிடு என உலக வல்லாதிக்கங்கள் ஆசை காட்டிய போதும் அதை புறங்கையால் ஓரம்தள்ளிய தலைவன் எங்காவது உண்டா?
எங்கள் போராட்டம் வெற்றிபெற்று தமிழீழ சோசலிச குடியரசு அமைந்தால் கூட நான் அதற்கு அதிபரோ பிரதமரோ ஆகமாட்டேன் . சனநாயக அடிப்படையில் தான் தலைமைத்துவம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த தலைவர் அவர்.
மொத்த குடும்பத்திற்கும் பதவி வாங்க யார் காலிலும் விழுவேன் என்ற நிலையில் இங்கு சிலர் இருக்க,
தன் பிள்ளைகளையும் போர்க்களத்தில் பலியிட்ட தலைவன் வேறு உண்டா?
போர்க்களத்தில் மூத்த பிள்ளையையும் இனப்படுகொலையில் இளைய பிள்ளையையும் பலிகொடுத்த தலைவர் அவர்.
எதிரியே ஆனாலும் போர் நெறி தவறாமல், தமிழர் அறம் வழுவாமல் சமர் செய்த ஒரு தலைவன். அந்த தலைவன் கட்டிய உலகிலேயே ஒழுக்கமான ஒரு மக்கள் இராணுவ படை.
இதை நம் சமகாலத்தில் கண்முன் கண்ட நமக்கு இதைவிட பெருமிதம் கொள்ள வேறு என்ன இருக்கிறது
தனக்கு வேண்டியதை இயற்கை கால ஓட்டததில் தானே உருவாக்கிக் கொள்ளும் என்பது பரிணாம விதி.உலகில் பாவங்கள் அதிகரிக்கும்போது இறைமகனாய் கடவுள் பூமியில் பிறப்பார் என்பது ஒரு மதத்தின் நம்பிக்கை
உலகில் அநீதி தலைவிரித்து ஆடும்போது கடவுள் பூமியில் அவதாரம் எடுப்பார் என்பது மற்றொரு மதத்தின் நம்பிக்கை.ஆனால் தமிழ் மெய்யியலில் நமது மீட்பர்களும் இறைகளும் அவதாரங்கள் அல்ல,
நம்மோடு வாழ்ந்து , தலைமை தாங்கி , மண் காக்க மக்களை காக்க போராடியவர்கள்,நமக்காக போர் கண்டு மாண்டவர்கள். இவர்களெல்லாம் தான் இறை நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்
தமிழினத்திற்கு யார் இறை என்பதை பெரும்பாட்டன் வள்ளுவன் எவ்வாறு வரையறுத்திருக்கிறார்?முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப்படும்.
மண்,மக்கள் அறம் காத்து மக்களுக்காகவே வாழ்ந்த தலைவன் இறை நிலைக்கு வைக்கப்படுவான்.வள்ளுவனும் இயற்கையும் வகுத்த விதியின்படி, வீழ்ந்து கிடந்த தமிழினத்திற்கு, சமகாலத்தில் காலம் தந்த இறையே நமது தலைவர் மேதகு வே பிரபாகரன்
இறை என்பதால் அவரை சாமியாக்கி பூப்போட்டு வணங்கிவிட்டு , நம்ம வேலைய பாத்துவிட்டு போய்விடலாம் என்பது அல்ல .புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்து ஒன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
“என்னை கடவுள் ஆக்காதே நீ.. தோற்றுவிடுவாய்.என்னை ஆயுதம் ஆக்கி போராடு. தலைவரின் கனவு தான் நமது லட்சியம்.அவரின் தத்துவங்கள் தான் நமது ஆயுதம்.
இறையை மனதில் ஏற்று , அவரின் கனவை நனவாக்க உழைப்போம்.தமிழருக்கு அரசியல் அதிகாரம் முழுமையாக கிடைக்கும் அந்த நாள் வரும்.தமிழீழ தாகம் தணியும் அந்த நாள் வரும் . அது வரை போராட்டம் தான் நமக்கு வழிபாடு, இலட்சிய உறுதி தான் நமக்கு தவம்.
” ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா ” என பாடிய இனம் போர்க்களத்தில் காயம்பட்டு கிடக்கும்போது என்னை விட்டுவிடுங்கள் என் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு முன்னேறிச் செல்லுங்கள் என கூறிய படைக்கூட்டம்.
அவர்களின் சீருடைகளுக்கு பதில் அவர்களின் இலட்சியத்தை எடுத்துக்கொள்வோம்.ஆயுதங்களுக்கு பதில் தமிழ்தேச தத்துவங்களை எடுத்துக்கொள்வோம்.
தலைவனாய் இருந்து இறைவனாய் உயர்ந்த மேதகு வின் கனவை சுமந்து முன்னேறுவோம்.அவரே நம் தலைவன் அவரே நம் இறைவன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.