தேனி.
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து இரு போக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்கான தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, ஆகியோர் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்.கே.எஸ்.சரவணகுமார் முன்னிலையில் இன்று (03.07.2024) திறந்து வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப்பகுதியில் இரு போக பாசனப் பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு விநாடிக்கு 900 கனஅடி/ வினாடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் இன்று முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதன்படி, பெரியாறு பாசனப்பகுதியில் இரு போக பாசன நிலங்களில் முதல் போகத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பதால் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 16,452 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 26,792 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.
இந்நிகழ்வில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்.தங்கவேல், நகர்மன்ற தலைவர்கள் ரேணுபிரியா பாலமுருகன்(தேனி-அல்லிநகரம்), சுமிதா சிவக்குமார் (பெரியகுளம்), செயற்பொறியாளர் (பெரியாறு வைகை வடிநிலக் கோட்டம்) ந.அன்புச்செல்வம், உதவி செயற்பொறியாளர் (வைகை அணை உபகோட்டம்) .பா.முருகேசன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் .நாராயண பாண்டியன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட செய்தியாளர். அசோக்குமார்.