நாகர்கோவில், மே 31:
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) 50 பிரதம சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 8,500 லிட்டர் பால் கொள்முதல் செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு மருத்துவ சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் (ஒன்றிய பணி நிலைத்திறனில் ஒப்பந்த அடிப்படையில் ஆன ஒதுக்கீடு) காலியாக உள்ள ஒரு கால்நடை உதவி மருத்துவர் பணியிடத்தினை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள 50 வயதிற்குட்பட்ட கால்நடை மருத்துவ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியான விவரங்களுடனும் உரிய பட்டப்படிப்பு கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடன் ஜூன் 11 அன்று காலை 11:30 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.