தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் அண்ணா நகர், கோழி மேக்கனூர், திரு.வி.க., நகர், சக்தி நகர், வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 2, 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இதில் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் இணைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதனை திரும்ப பெற வலியுறுத்தியும் வெங்கடசமுத்திரம் ஊராட்சியை,ஊராட்சியாகவே இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும்
வெங்கடசமுத்திரம் ஊராட்சி பொதுமக்கள்,100 நாள் வேலை செய்யும் பெண்கள்,
கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சேலம்– தர்மபுரி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பங்கேற்று பேசினார்.அதிமுக ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், நிர்வாகிகள் ராஜேந்திரன், ராஜாமணி மற்றும் ஊர் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் திடிரென்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் வான்மதி, லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வன், ஜொதிகணேஷ் ஆகியோர்களிடம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன், வெங்கட சமுத்திரம் ஊராட்சியை இணைக்க வேண்டாம் என வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.இதனை பெற்று கொண்ட அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று பென்னாகரம் பேரூராட்சியுடன் பருவதனஅள்ளி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் ,இதை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து பொதுமக்கள் மறியல் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மனுவை மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாகவும், அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.