வேலூர், டிச. 18 –
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சாதாரண கவுன்சில் கூட்டம், மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக பதவி ஏற்றது, மகளிருக்கு இரண்டாவது கட்டமாக உரிமைத்தொகை வழங்கப்பட்டது, முதியவர்களை பாதுகாக்கும் ‘அன்புச்சோலை’ திட்டம் உருவாக்கப்பட்டது ஆகிய முக்கிய நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர் சுஜாதா முன்மொழிந்து, அது நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய துணை மேயர் சுனில்குமார், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி ரூ.1,000 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஆனால், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி முதல் மண்டலப் பகுதி மாநகராட்சி நிர்வாகத்தால் முழுமையாக புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
கல்வி நிதி, பொதுநிதி, பொது சுகாதாரம், பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்திலும் காட்பாடி பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் ஆவேசமாக பேசினார். காட்பாடி பகுதிக்கு நிதி ஒதுக்கி மக்கள் பணிகளை மேற்கொள்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, இதற்கு பதில் அளித்த பிறகே கூட்டத்தை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அப்போது, இரண்டாவது மண்டலத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் ஏழுமலை, மற்றும் சுதாகர் பாச்சி என்கின்ற சதீஷ் குமார் துணை மேயரை பேசவிடாமல் இடையூறு செய்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், துணை மேயர் சுனில்குமார், முதல் மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்ட 13 திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் காரணமாக, கவுன்சில் கூட்டம் தொடங்கிய உடனே திமுகவினரிடையே கடும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் கால்வாய், சாலை மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களால் பொதுமக்கள் சந்தித்து வரும் சிரமங்கள் குறித்து தொடர் புகார்களை முன்வைத்தனர். இதற்கு இடையில் குறுக்கிட்ட மேயர் சுஜாதா, கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு சாலையாவது அமைக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.
இதனால், அதிமுக எழில் கவுன்சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதுடன், மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்களும் கூச்சலிட, திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் பரபரப்பு நிலவியது.
இவ்வாறான சர்ச்சைகளுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக மொத்தம் 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



