நாகர்கோவில், டிச. 27 –
தவெக தலைவர் விஜயிடம் அரசியல் தெளிவும் இல்லை. பக்குவமும் இல்லை. அவர் அரசியலை தவிர்த்து விட்டு, சினிமாவில் நடிக்க செல்வதே மேல் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகள் சரியாக இருப்பதாக தெரியவில்லை. அரசியலில் தெளிவு இல்லாமலும், பக்குவம் இல்லாமலும் இருப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
கட்சியின் அஸ்திவாரமே தொண்டர்கள் தான். அவர்களின் உழைப்பிற்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதை விடுத்து நான் தான் ஹீரோ, மற்றவர்கள் எல்லோருமே சீரோ என்கிற வகையில் நடந்துக் கொள்வது அரசியல் புரிதல் இல்லாததை காட்டுகிறது.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள அஜிதா ஆக்னஸ் போன்ற உண்மையான தொண்டர்கள் கிடைப்பது கஷ்டம். அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற மரியாதையை கொடுத்தே ஆக வேண்டும். அதை விடுத்து தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் ஜனநாயகன் பட ஆடியோ வெளியீட்டுக்காக மலேசியாவுக்கு சென்றது, அவரது அரசியல் ஆர்வமின்மையை தான் காட்டுகிறது.
ஜனநாயகன் பட வசூலை அதிகரிக்கும் முயற்சியில் தான் அதிக ஆர்வத்தை காட்டுகிறாரே தவிர, கட்சியை வளர்ப்பதற்குரிய ஆர்வம் குறைவாக தான் காணப்படுகிறது. அதிமுக மற்றும் திமுகவை வீழ்த்தி தவெக தலைமையிலான கூட்டணி நிச்சயம் அரியணை ஏறும் என்கிற கனவில் மட்டும் விஜய் இருக்கிறார். இது சாத்தியமாகுமா? என்பது கேள்விக்குறி தான்.
திமுகவை தொடங்கிய அண்ணா கூட திருச்சி மாநாட்டில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிறகே 1957 -ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டார். 15 தொகுதிகளில் வென்றார். இதனை தவெக தலைவர் விஜய் புரிந்துக் கொள்ள வேண்டும்.
தேர்தலில் போட்டியிட்ட உடனேயே முதலமைச்சர் ஆக வேண்டும் என்று நினைப்பது தவறு. அப்படி நினைப்பு இருந்தால், அரசியலை தவிர்த்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க செல்வதே மேல். இவ்வாறு முத்துக்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.



