தருமபுரி மாவட்டம்,
தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, வனத்துறை, காவல்துறை இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும்விழா, சட்ட விழிப்புணர்வு முகாம் சேசம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் ஆட்சியர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு 43 பேருக்கு ரூ. 34 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி கூறியதாவது:
குக் கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் மற்றும் பாமரர்கள் ஆகியோர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தை அணுகி மனு அளித்து தங்களுக்கான சட்ட உதவிகளை இலவசமாக பெற்று பயனடையலாம். ஓய்வு பெற்ற நீதிபதிகள், சமூக நலத்துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த உதவி மையத்திற்கு இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி சுமுகதீர்வு வழங்குகின்றனர்.
இந்த மையத்தில் வழங்கப்படும் தீர்வானது நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்வுக்கு நிகராக ஒன்றாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சட்ட உதவி மையத்தை அணுகி தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், உதவி ஆட்சியர் காயத்ரி, வக்கீல்கள், சங்கத் தலைவர் அழகுமுத்து உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.