திருவட்டாறு, மார்- 7
ஆற்றூர் பேரூராட்சி, தேமனூர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் சிவன் என்ற செல்வன் (38). இவர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வருகிறார். இவர் பேரூராட்சியில் திட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இதில் இவரது வீட்டிற்கு செல்லும் பாதையை பஞ்சாயத்து பாதை என போலி ஆவணம் தயாரித்து வைத்து இருந்ததாக வங்கி நிர்வாகம் கண்டுபிடித்தது. பேரூராட்சி செயலாளர் கையொப்பமிட்டு அலுவலக சீலடித்த நிலையில் போலி ஆவணம் தயாரித்து வங்கியில் கொடுத்துள்ளார்.
இது குறித்து வங்கி நிறுவனம் சார்பில் பேரூராட்சி செயலாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து பேரூராட்சி செயலாளர் ஷைனி பிரியா திருவட்டாறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வன் மீது ஏற்கனவே வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக ஒரு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது