ஊட்டி. டிச. 24.
வார விடுமுறை நாளையொட்டி கர்நாடகா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.
குறிப்பாக உதகையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, கர்நாடகா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் வார விடுமுறை நாளையொட்டி உதகை பெர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள கர்நாடக பூங்காவில் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் அருவி, தொங்கு பாலம், தேயிலை தோட்டம், வண்ண மீன்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் அமர்ந்தவாறு, இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு முதன்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி கர்நாடகா பூங்காவில் நடைபெறுவதையொட்டி பல்வேறு பணிகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.