கன்னியாகுமரி ஆக 5
மாதங்களில் ஆடி மாதம் ஆன்மிக வழிபாடுகளுக்கான மாதமாகத் தனிச் சிறப்பைப் பெற்றிருப்பதைப் போல அனைத்து மாதங்களில் அமாவாசை தினம் வந்தாலும் ஆடி மாதம் வரும் அமாவாசை தனிச்சிறப்பு பெற்றதாக உள்ளது. அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்குத் திதி தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களில் ஆசியால் குடி செழிக்கும் என்பது ஐதீகம்.அப்படி ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து முன்னோருக்குத் திதி கொடுக்க முடியாதவர்கள் ஆடி மாதம் வரும் அமாவாசை தினத்தில் திதி தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் செய்த பலனைப் பெற முடியும். மேலும், முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைவதுடன் அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெற முடியும்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றங்கரை, கடற்கரை, குளங்களில் பெருந்திரளாக சென்று தர்ப்பணம் செய்கின்றனர். அந்த வகையில்
ஆடி அமாவாசையான நேற்று
கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தனர்.
இதற்காக அதிகாலை 4 மணியிலிருந்து குமரியில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குமரி கடலில் நீராடி முன்னோர்களுக்கு கர்ம பூஜைகளை செய்தனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலையில் சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமாக இருந்தது.
இதனால் குமரியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகவதி அம்மன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



