திருவண்ணாமலை, ஜன. 17 –
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தை மாதம் மாட்டு பொங்கலை யொட்டி திருவூடல் திருவிழா வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இதையடுத்து அண்ணாமலையார் இன்று கிரிவலம் சென்றார்.
திருவண்ணாமலையில் உள்ள திருவூடல் தெருவில் அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மனுடன் ஊடல் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயிலில் நேற்று மறு ஊடல் நடந்தது. இதற்கு முன்னதாக நேற்று அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் சென்றார். திருவண்ணாமலையில் உள்ள பாண்டீஸ்வரர் கோயிலுக்கு சென்ற அண்ணாமலையாருக்கு மாமன்ற உறுப்பினர் க.பிரகாஷ் தலைமையில் மண்டகபடி நடத்தப்பட்டது.
ஸ்ரீ கௌதம மகரிஷி கோயிலில் சாமிக்கு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும், மாலை பட்டு வஸ்திரங்கள் செலுத்தியும் வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கௌதம மகரிஷி கோயில் நிர்வாகிகள் சாரதாம்பாள் முருகன், மு.பாலசுப்பிரமணி, மு. வஜ்ஜிரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
கிரிவலபாதையில் ஆங்காங்கே பக்தர்கள் தேங்காய் உடைத்தும்¸ மாலை அணிவித்தும் தரிசனம் செய்தனர். 8 லிங்கங்கள் முன்பாக சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.



