நாகர்கோவில் – ஜூலை 31,
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி பேரூராட்சி அதிக மக்கள் தொகை கொண்டதும், அதிக வரி வருவாயை ஈட்டி வரும் பகுதியாகும். இப்பகுதியில் சுகாதாரத்தினை பேணி காக்கும் வகையில் தெருக்களில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமுலான பின்னர் இக் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் மக்கா குப்பை, மக்கும் குப்பை என தரம் பிரித்து தினமும் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் குப்பைகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக பல நாட்கள் தொடர்ச்சியாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை வாங்க வருவதில்லை. மேலும் குப்பைகளை சேகரித்து செல்ல வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளை கொண்டு வராமல் கோணிப்பைகளை கொண்டு வந்து அதில் சேகரமாகும் குப்பைகளை தெருக்களில் இழுத்து செல்லும் அவலம் நடந்தேறி வருகிறது. இத்தகைய போக்கு தூய்மை பணியாளர்களின் மாண்பை சீர்குலைப்பதோடு, அவர்களது தனி மனித உரிமைகளையும் பாதிப்புக்கு உள்ளாக்குவதாகவே உள்ளது. மேலும் சுற்றுச் சூழல் பாதிப்பிற்கும், சுகாதார சீர்கேட்டிற்கும் காரணமாகவும் அமைவதாகவும் திகழ்கிறது. இத்தகைய போக்கினை சமூக பொதுநல இயக்கம் கண்டிக்கிறது.
தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த சம்பளத்தொகை வழங்கபடுவது இல்லை எனவும், அவர்களுக்கான அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கூட வழங்கபடுவது இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் 10 நிரந்தர பணியாளர்களும், 26 தற்காலிக பணியாளர்களும் பணி புரிந்த நிலையில் தற்போது தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து போனதாகவும் கூறுகின்றனர். கடந்த 2021-22 ல் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்கு குப்பைகள் சேகரிக்க 14 மின் வாகனங்கள், 45 தள்ளுவண்டிகள் அரசால் வழங்கபட்டு உள்ளது.
ஆனால் இவற்றில் 5 மின் வாகனங்கள், 40 தள்ளுவண்டிகள் பழுதடைந்த நிலையில் பராமரிப்பின்றி குப்பை ஏற்றி வந்த இவ் வாகனங்கள் குப்பை போல் ஒதுக்கபட்டு உள்ளதாக பொதுமக்கள் குமுறுகின்றனர். இதனால் மக்களின் வரிபணம் விரயமாவதுடன், சுகாதார பணிகள் தேக்கமடையும் அவலமும் அரங்கேறி வருகிறது. இந்நிலை பேரூராட்சியின் செயலற்ற தன்மையினையே வெளிச்சப்படுத்துவதாக உள்ளது.
மக்களின் சுகாதாரத்தை பேணி காப்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் தலையாய கடமையாகும். எனவே அதனை தட்டி கழிக்காமல் தூய்மை பணியாளர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடுவதோடு, குப்பைகளை சேகரிப்பதற்கான வாகன வசதிகளையும் வழங்கிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.