ஊட்டி. டிச. 17.
ஊட்டியில் உள்ள சுற்றுலா மையமான ஏரி கழிவுநீர் கலந்து துர்நாற்ம் வீசியதால் அதனை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.
அதனடிப்படையில்
உதகை படகு இல்ல ஏரியை ரூ.7 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன இயந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
படகு இல்ல ஏரி 45 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளதால் முழுமையாக தூர்வார மேலும் நிதி தேவைப்படுவதால் முதலமைச்சரிடம் ஆலோசித்து பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தகவல்…
நீலகிரி மாவட்டம் உதகையில் முக்கிய சுற்றுலா தலமாக உதகை படகு இல்லம் திகழ்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் உதகை ஏரியில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஏரி 1823-ல் செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலையில், உதகை நகரில் கட்டப்படும் கட்டிடங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், வீடுகள், தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக உதகை ஏரியில் கலக்கிறது.
மேலும் விவசாய நிலங்களில் இருந்து அடித்து வந்த மண்ணும் படிகிறது.
ஆண்டிற்கு சுமார் 4 லட்சம் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் கோடப்பமந்து கால்வாயில் இருந்து கொண்டு வரும் தண்ணீரை அதிக அளவில் சேமிக்கவும் வலியுறுத்தி உதகை படகு இல்ல ஏரியை தூர்வார வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் உதகை படகு இல்ல ஏரியை தூர் வாரும் பணிகள் சுமார் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியுள்ளன. அதிநவீன இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஏரியில் படிந்துள்ள வண்டல் மண்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று உதகை படகு இல்ல ஏரியை தூர்வாரும் பணியை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் . அதன் அடிப்படையில் உதகை படகு இல்ல ஏரியை சுமார் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், 45 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த ஏரியை முழுமையாக தூர்வார மேலும் நிதி தேவைப்படுவதால் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று ஆலோசனை மேற்கொண்டு ஏரியை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். தற்போது நடைபெற்று வரும் பணிகள் இரண்டு மாதத்திற்குள் முடிவடையும் என்றும் ஏரியை 8 மீட்டர் ஆழத்திற்கு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.