களியக்காவிளை, அக், 13 –
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேக்கோடு – வன்னியூர் ரோட்டில் நெய்யாறு இடது கரை சானலின் கரை இடிந்து விழுந்துள்ளதினால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
நெய்யாறு இடது கரை சானல் தண்ணீர் விளவங்கோடு தாலுகா விவசாய்களின் ஜீவாதாரமாக விளங்கியது. கடந்த பல வருடங்களுக்கு முன் இந்த சானலில் தண்ணீர் திறந்து விடுவதை கேரளா அரசு நிறுத்திவிட்டது. அதன் பிறகு நெய்யாறு இடது கரை சானலில் செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. மேலும் வீடுகளில் இருந்து வரும் சாக்கடை கழிவு நீர் சானலில் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக நெய்யாறு இடது கரை சானல் விளங்குகிறது. இவ்வாறு பாழடைந்து பயனற்று கிடக்கும் நெய்யாறு இடது கரை சானலின் கரைகள் அங்காங்கே இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய சூழ்நிலை காணப்படுகிறது. நேற்று முன்தினம் பெய்த கன மழையில் மேக்கோடு – வன்னியூர் ரோட்டில் சானலின் கரை இடிந்து விழுந்துள்ளது. இந்த ரோட்டில் அடிக்கடி வாகனங்கள் செல்வது வழக்கம். ரோட்டில் இருந்து சானல் சுமார் 20 அடி ஆழம் உள்ளது. வாகனங்கள் செல்ல ஆபத்தாக உள்ளது. ஆகவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சானலின் கரையை கட்டி எழுப்பி விபத்தை தவிர்க்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.