நாகர்கோவில் ஜூலை 05,
கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பதி சாரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் கணேசன் (எ) வெள்ளை கணேசன் (51) இவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி ஆவார். இவர் மீது திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை வழக்கும், கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.
நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கணேசன் (எ) வெள்ளை கணேசன் கடந்த 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டிருந்தார்.
அவரின் உத்தரவின்படி வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கணேசன் (எ) வெள்ளை கணேசன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



