சுசீந்திரம், அக். 25 –
சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பெரியகுளம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய குளம் ஆகும். இந்த குளத்தின் நீரை பயன்படுத்தி சுமார் 2000 ஏக்கர் நிலம் விவசாயம் செய்யப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சனையும் தீர்க்கும் குளமாக இந்த குளம் உள்ளது. இந்தக் குளம் ஊருக்கு உயரமான இடத்தில் உள்ளது.
பெருமழை காலங்களில் தத்தையார்குளம் புது கிராமம் குளம் நிறைந்த நீர்கள் தேரூர் குளத்திற்கு வரும். இதனால் பெருமழைகாலங்களில் தேரூர் குளம் நிறைந்து விடும். இந்த குளத்தின் நீரை ஷட்டர் மூலம் வெளியேற்றி வருகின்றனர். பெருமழை ஏற்படும் போது வெள்ளமானது வேகமாக செல்ல முடியாத சூழ்நிலையில் நீர் ரோட்டை கடந்து பாய்வதால் அந்த இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு உடைப்பு ஏற்படுகின்றது. ஏற்கனவே சென்ற பெருமழையில் புதுக்கிராமம் குளத்திற்கும் தேரூர் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தற்போது காற்றழுத்த தாழ்வின் காரணமாக தொடர்மழை பெய்து வருகிறது. குளம் முழு கொள்ளளவை எட்டி உடைப்பு ஏற்பட்டால் பள்ளத்தில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தை பார்வையிட்டு உடைப்பு ஏற்படும் முன்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



