தென்காசி, டிச. 17 –
தமிழ்நாடு நீதிமன்றங்களில் டிசம்பர் 1 முதல் இ – பைலிங் முறையை நடைமுறைப்படுத்திய நிலையில் அதனை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக அனைத்து வழக்கறிஞர்களும் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டமும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி பார் அசோசியேசன் தலைவர் சிவக்குமார், தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் ஆர்.மாடக்கண்ணு ஆகியோர் தலைமை தாங்கினர். செங்கோட்டை சாமி, ஆலங்குளம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆலடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் தலைவர் கரூர் நா.மாரப்பன் கலந்து கொண்டார்.
அதனைக் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கரூர் மாரப்பன் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை உடனடியாக வாபஸ் பெற கோரி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் உயர்நீதிமன்றம் இ-பைலிங் முறையை வாபஸ் பெறவில்லை. உடனடியாக அதனை முற்றிலும் வாபஸ் பெறாவிட்டால் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது.
அதனைத் தொடர்ந்து வரும் 19.12.2025 அன்று சென்னை உயர் நீதிமன்றம் முன்பு
பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் உயர் நீதிமன்றம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு இ-பைலிங் முறையை உடனடியாக முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மனித சங்கிலி போராட்டம் மற்றும் வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மூத்த வழக்கறிஞர்கள் அப்துல் மஜீத், ஆர்.எஸ். சுப்பிரமணியன், ரெ. ஜெகதீசன், கே.பி. குமார் பாண்டியன், நிஷாந்த் கண்ணன், ஜோன்ஸ், மாடசாமி பாண்டியன், சைலபதி, சு. வேலுச்சாமி, முருகன், சின்னத்துரை பாண்டியன், கே. தங்கதுரை, மூர்த்தி, முன்னாள் தலைவர் செல்லத்துரை பாண்டியன், பிச்சிராஜ், கோபால கிருஷ்ணன், பூசைத்துரை, ஆக்ஸ்போர்டு க. திருமலை, அருண், ஜெபா, ஆறுமுகம் என்ற கண்ணன், செல்வகுமார், தாஹிரா பேகம், சங்கர சுப்பிரமணியன், சண்முகவேலு மற்றும் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், சிவகிரி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் ஆர். மாடக்கண்ணு அனைவருக்கும் நன்றி கூறினார்.



