நாகர்கோவில் மே 23
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட109 பள்ளிகளுக்கு சொந்தமான 402 க்கும் மேற்பட்ட வாகனங்களை நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி ஆகியோர் ஆய்வு செய்தனர் மேலும் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவு.
தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா? என ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு இன்று நடந்தது. நாகர்கோவில் கண்கார்டியா பள்ளியில் இந்த ஆய்வு நடந்தது. இதற்காக காலை முதலே பள்ளி வாகனங்கள் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வட்டார போக்குவரத்து அதிகாரி சசி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார் ஆகியோரும் உடன் சென்று ஆய்வு செய்தனர்.
பள்ளி வாகனங்களில் அவசரகால பாதைகள் சரியாக உள்ளதா என்பது குறித்து அளவீடு செய்து பார்த்தார். பள்ளி வாகனத்தின் பின்புறம் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார். முன்னதாக டிரைவர்களுக்கு தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தீயணைப்பு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறுகையில்,
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 109 பள்ளிகள் 402 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன இந்த வாகனங்கள் ஆய்வுக் கூட்படுத்தப்பட்டுள்ளது. 22 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அந்த 22 விதிமுறைகளும் பள்ளி வாகனங்களில் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி வாகனங்களில் குழந்தைகளை பத்திரமாக ஏற்றி செல்ல வேண்டும். டிரைவர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த கூடாது. சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். டிரைவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். சீட் பெல்ட் போட்டு வாகனம் ஓட்ட வேண்டும். ஆய்வின்போது ஏதாவது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 15 நாட்களுக்குள் சரி செய்து அனுமதி பெற்ற பிறகு தான் வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து பள்ளி வாகனங்களில் அரசு தெரிவித்துள்ள விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வாகனங்களில் அவசரகால பாதை உள்ளதா? தீயணைப்பு கருவி உள்ளதா? படிக்கட்டின் உயரம் அரசு விடுமுறைக்கு உட்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் முதலுதவி சிகிச்சை பெட்டியுள்ளதா? சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 10 வாகனங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்தது. அந்த குறைபாடுகளை சரி செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.



