ராமநாதபுரம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி பூஜை
நினைத்தது நிறைவேறும் அற்புதம் அலைமோதும் பக்தர்கள்
ராமநாதபுரம், ஆக.18-
ராமநாதபுரம் மாவட்டம் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நயினார்கோயில் விலக்கு அருகில் இடையர்வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயில் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலான பக்தர்கள் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் செல்லும் போது ராமநாதபுரம் நயினார்கோவில் விலக்கு அருகில் இடையர் வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் பக்தர்கள் நினைத்தது நிறைவேற வேண்டி பிரார்த்தனை செய்து செல்கின்றனர். குறிப்பாக வியாழக்கிழமை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகளும் சிறப்பு தீபஆராதனைகளும் சிறப்பு கூட்டு வழிபாடும் நடைபெறுவதால் அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனதில் நினைத்து ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவை வேண்டி வணங்கி செல்கின்றனர்.
இந்த சிறப்புமிக்க ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் சன்னதி முன்பாக ராமநாதபுரம் இடையர் வலசை முதுநாள் ,அச்சுந்தன் வயல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். சுமங்கலி பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். சுமங்கலி பூஜை ஏற்பாடுகளை கோயில் மேனேஜிங் டிரஸ்டி அதிவீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர். சிறப்பு சுமங்கலி பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.



