தென்தாமரைகுளம்., டிச. 13.
குமரி மாவட்டம் தாமரைகுளம் பதி குரு பரம்பரை அறக்கட்டளை சார்பில் அய்யாவழி ஆய்வு மையம் அடிக்கல் நாட்டு விழா, மற்றும் அகிலத்திரட்டு உதய தின விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் வருகை தந்தார்.சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர் அங்கிருந்து கார்
மூலம் இரவு நாகர்கோவில், ராமவர்மபுரம் அரசு விருந் தினர் மாளிகைக்கு வந்தார்.அங்கு அவரை குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா பூச்செண்டு அளித்து வரவேற்றார். நேற்று காலை நாகர் கோவிலில் இருந்து காரில் தாமரைகுளம் பதிக்கு புறப்பட்டு வந்த கவர்னருக்கு தாமரை குளம் பதி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அதன் பின்பு பதியின் உள்ளே தலைப்பாகை அணிந்து சென்ற கவர்னர் அய்யா வைகுண்ட சுவாமியை தரிசனம் செய்தார் அதன் பின் பதியின் வளாகத்தில் மரக்கன்று நட்டார். அதனை தொடர்ந்து அய்யாவழி ஆய்வு மையம் புதிய கட்டிடத்திற்கு கவர்னர் ஆர். என். ரவி அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டுவிழாவிற்கு தாமரைகுளம் பதியின் குரு.சவு.ராஜசேகரன் தலைமை தாங்கினார், குரு.சவு.பிரபாகரன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்கள் உட்பட திரளான பொது மக்கள் பங்கேற்றனர் .பின்னர் சாமி தோப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில உலக அய்யா வழி சேவை அமைப்பு சார்பில் நடைபெற்ற அகில
திரட்டு அம்மானை உதய தின விழாவில் கலந்து கொண்டு புனித அகிலத்திரட்டு அம்மானை வேத நூலை வெளியிட்டு உரையாற்றினார். கவர்னர் வருகையை யொட்டி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.