கன்னியாகுமரி, அக். 15 –
மாநில அளவிலான கைப்பந்து அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முகாம் திருப்பத்தூரில் நடைபெற்றது. அதில் மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் பள்ளி அளவில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் செல்வ ஆகாஷ் தேர்வுசெய்யப்பட்டார். இந்த மாணவனுக்கு பள்ளி சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. அப்போது நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கால்வின் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை அனு ஜெ பிரீத்தா முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவரை பாராட்டி மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் டென்னிஸ், தென்தாமரைகுளம் பாண்டவர் அணியை சார்ந்த சந்திரசேகர், ஜெயம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மரிய ஜெனிஃபர், தீபக் சாலமன், தாமரை குளம் கஸ்பா ஆலய கணக்கர் பெனி ஜோசப் பயிற்சியாளர்கள் தீயணைப்புத் துறையை சேர்ந்த அசோக்குமார், அருண் ஆகியோர் பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில் மாணவனுக்கும் மாணவனின் பெற்றோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக ஆசிரியை ஆன்லின் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் ஆசிரியை ஜாண்சி ரீடா நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவனை பாராட்டினர்.



