நாகர்கோவில் ஏப்ரல் 13
குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. இதனை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் பாராட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொலை, கொள்ளை,திருட்டு பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. அனைத்து அதிகாரிகள் ஆளினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து கடந்த மார்ச் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக ஆரல்வாய்மொழி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேடயம் வழங்கினார். அதனை நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் மற்றும் அருள்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் பச்சமால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாட்சியங்களை சரியான முறையில் அழைத்து வந்து நீதிமன்ற விசாரணை வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்,
திருட்டு வழக்கு குற்றவாளிகளை முறையாக கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், போஸ்க்கோ சட்டம் பற்றிய விழிப்புணர்வை மாணவ மாணவிகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்,
அனைத்து அதிகாரிகளும், காவலர்களும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்
கஞ்சா குட்கா மாவட்டத்திலிருந்து அறவே ஒழிக்க பணி செய்ய வேண்டும். போதை பொருள் குறித்தான அதிகமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,
மேலும் கடந்த மார்ச் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு குற்ற வழக்கறிஞர்கள் மற்றும் போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்முயற்சியான ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற நிலையை எட்ட அனைவரும் உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.