நாகர்கோவில் நவ 9
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம், பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் வகுப்பறை முன் பகுதிகளில் உடைந்து காணப்படும் அலங்கார தரை ஓடுகளை மாற்றி புதிய அலங்கார தரை ஓடுகள் பதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரத்திடம் கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
அஞ்சுகிராமம், பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 6 இலட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற தளவாய்சுந்தரத்திடம் கல்லூரி முதல்வர் சரோஜா மற்றும் மாணவ, மாணவிகள் கல்லூரி வகுப்பறை முன் பகுதிகளில் உடைந்து காணப்படும் அலங்கார தரை ஓடுகளை மாற்றி புதிய அலங்கார தரை ஓடுகள் பதிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். உடனடியாக மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட வகுப்பறைகள் முன்பாக அலங்கார தரை ஓடுகள் உடைந்து காணப்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் கூடங்குளம் பகுதியிலிருந்து மாணவ, மாணவிகள் ஏராளமானோர் இக்கல்லூரியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இக்கல்லூரிக்கு வருவதற்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூடங்குளத்திலிருந்து பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு வருவதற்கு ஏதுவாக பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தளவாய்சுந்தரம் கூறினார்.
உடன் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூர் கழகச் செயலாளர் ராஜபாண்டி, அம்மா பேரவை செயலாளர் மணிகண்டன், விவசாய அணி செயலாளர் முருகன், வார்டு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், காமாட்சி ஆகியோர் இருந்தனர்.